Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

LENIN DEVARAJAN18-04-2024
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் மூவரிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணத்தை கொண்டுவந்த மூவரிடம் போலீசார் விசாரித்ததில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என தாம்பரம் போலீசாரிடம் கைது செய்யப்பட்ட மூவரும் வாக்குமூலம் அளித்தனர். மேலும், அந்த மூன்று பேர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான தனியார் ஹோட்டலின் ஊழியர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இதனால், நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து நெல்லை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்டதால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை போலவே தேர்தல் ஆணையமும் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இன்று விசாரிப்பதாக தெரிவித்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்