Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு

ESWAR19-04-2024
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு

கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, ஏப்ரல் 22-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் தனக்கு இன்சுலின் ஊசி செலுத்தவும், தனது மருத்துவருடன் காணொலியில் ஆலோசனை நடத்தவும் அனுமதிக்க கோரி கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு முடிவு செய்ய வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துரையாட அனுமதிக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது

இந்த விசாரணையின் போது, “ஜாமீன் பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே சர்க்கரையை அதிகம் உண்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதற்கு கெஜ்ரிவால் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரித்தார்.

விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “இதுவரை 48 தடவை வீட்டிலிருந்து அனுப்பிய உணவில் மூன்று முறை மட்டுமே மாம்பழங்கள் அனுப்பப்பட்டன. ஏப்ரல் 8-க்கு பிறகு மாம்பழங்கள் அனுப்பப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படவில்லை. மோசமான குற்றவாளியும் இல்லை. எனவே போதுமான சிகிச்சை பெறும் நோக்கில் சிறை துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோயிப் ஹுசைன், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலில் பழமோ, இனிப்போ இல்லை. இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு முடிவு எடுக்கட்டும்” என வாதிட்டார்.

இதனையடுத்து, திகார் சிறையின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மருத்துவர் குழு முடிவு எடுக்கட்டும். இவரது மனு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை” என வாதிட்டார்.

இந்நிலையில், இந்த மனு மீதான உத்தரவு வரும் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்படுமென டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்